மாரியம்மன் வரவேற்கின்றோம். குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.04.1933 

Rate this item
(0 votes)

மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக்கொண்டும் மலைவாசலம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங்களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை. 

இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை. 

முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல" உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன. 

ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன். காத்தவராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவுகிடையாது. இந்த தேவதைகளை” வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும், இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்கமில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏக்காலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்.

மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சிப்பிரதி கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை. 

உதாரணமாக ஈரோட்டில் 3 மாரியம்மன்கள் உண்டு. இவைகள் கட்சி யில்லாமல் நடந்த காலமே அருமை. தவிர ஒவ்வொரு கோவிலும் ஊருக்குள் வீடுகளுக்கு மத்தியில் இருக்கின்றது. உற்சவ காலத்தில் இரவு எல்லாம் தப்புக்கொட்டுவது அக்கம் பக்கத்திய ஜனங்களுக்கு தூக்கம் இல்லாமல் செய்துவிடுகிறது. இவற்றுள் ஒன்று குழந்தைகள் பெண்கள் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதற்குப் பெரிய மாரியம்மன் என்று பெயர். இந்த கோவிலில் தப்பட்டை அடிப்பதால் ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களுக்கு அதிக தொல்லை உண்டு. ஆதலால் இந்த வருஷம் ஆஸ்பத்திரி நிர்வாகஸ்தர் சர்க்காருக்கு விண்ணப்பம் போட்டு இரவு பத்து மணிக்கு மேல் கோவிலில் தப்புக் கொட்டக்கூடாது என்ற உத்திரவை கோவில் அதிகாரிகளுக்கு சார்வு செய்திருப்பதாய்த் தெரிகின்றது. இந்தப் பெரிய மாரி இந்த உத்திரவு போட்ட வர்களையும் கேட்டவர்களையும் என்ன செய்யுமென்பது இனிமேல் பார்க்கக் கூடிய விஷயமானாலும் இந்த உத்திரவை நாம் இப்போது மனமார வரவேற் கின்றோம். 

போலீசுக்கு ஒரு வார்த்தை கடைசியாக போலீசுக்கு ஒரு வார்த்தை. இந்த பண்டிகையை உத்தே சித்து வாலிபர்களில் பலர் பலவித ஆபாசமான வேஷம் போட்டு பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி தொந்திரவு செய்வதும் குடித்து விட்டு கண்டபடி தப்புக்கொட்டிக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு திரிவதுமான காரியங்களை போலீசார் கவனித்து நியூ சென்சுக்கு சார்ஜ் செய்வதன் மூலம் இக்காரியங்களைச் செய்தால் அதனாலும் வாலிபர் களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் இப்படிச் செய்வதையும் மனமார வரவேற்போம் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.04.1933

 
Read 39 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.